பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். பெரும்பாலும் மலையாள திரையுலகில் பணியாற்றிய அவருக்கு வயது 90. சில காலமாக வயது மூப்பு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த சேது மாதவனுக்கு மனைவி வல்சலா, சந்தோஷ், உமா மற்றும் சோனுகுமார் என மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.
தனது படைப்புகளுக்காக பத்து தேசிய திரைப்பட விருதுகள், சிறந்த இயக்கத்திற்கான நான்கு விருதுகள் உட்பட ஒன்பது கேரள மாநில விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் இயக்குநர் சேதுமாதவன். சிவக்குமார் மற்றும் ராதா நடிப்பில் அவர் இயக்கிய ‘மறுபாக்கம்’ என்ற தமிழ் திரைப்படம் 1991-ல் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. முக்கியமாக 1962-ல் நடிகர் கமல்ஹாசனை மலையாளத்தில் ‘கண்ணும் காரலும்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சேதுமாதவன்.
கமலின் நம்மவர், எம்.ஜி.ஆரின் நாளை நமதே, உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார். அதோடு 2009-ம் ஆண்டு ஜே.சி.டேனியல் விருதையும் பெற்றார் இயக்குநர் சேதுமாதவன்.