கோலாலம்பூர், ஜனவரி 13 :
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தேசிய இதயக் கழகத்திலிருந்து (IJN) இன்று மாலை 3.45 மணியளவில் அவரது பிரத்தியேக மருத்துவ சிகிச்சைக்குப் பின், அங்கிருந்து வெளியேறினார்.
தேசிய இதயக் கழகம் வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், சிகிச்சைக்கு பின்னரான செயல்முறைகளை டாக்டர் மகாதீர் வீட்டிலேயே மேற்கொள்வார் என்று கூறியது.
“டாக்டர் மகாதீரும் அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது டாக்டர் மகாதீர் தேசிய இதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அவரது உடல் நலத்திற்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததாக” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் மகாதீர் ஜனவரி 7 ஆம் தேதி IJN இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஏற்கனவே டிசம்பர் 16 அன்று, டாக்டர் மகாதீர் IJN இல் முழுமையான மருத்துவப் பரிசோதனை மற்றும் மேலதிக கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 23 அன்று காலை 11.39 மணிக்கு IJN ஐ விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.