அலோர் ஸ்டார்:
கடந்த ஆண்டு முதல் RM1.7 மில்லியனுக்கும் அதிகமான தொகையில் சட்டவிரோதமாக ‘கூட்டு’ (Kootu) திட்டத்தை நடத்தியதாக 36 வயது பெண் ஒருவர் மீது அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி ஷர்மிளா அப்துல் சமத் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதை அடுத்து, சந்தேக நபரான சித்தி சுலைகா அகமத் சப்ரி தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சாங்லூன், புக்கிட் காயூ ஹித்தாம், கம்போங் பாடாங் சத்துவில் உள்ள வீட்டில் வைத்து ஜூலை 2025 முதல் நடப்பு ஆண்டின் ஜூலை மாதம் வரை 52 பேரைக் கொண்டு சட்டவிரோதமாகச் சீட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1971-ஆம் ஆண்டின் கூட்டு நிதி (தடை) சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM500,000 அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் RM100,000 பிணைத் தொகை கோரியபோதிலும், சந்தேக நபரின் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில், நீதிபதி அவருக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டார். மேலும், வழக்கின் உண்மைகள் மற்றும் தண்டனை விவரங்களை அறிவிக்க செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை அப்பெண் பொக்கோக் சேனா சிறையில் அடைக்கப்படுவார்.
முன்னதாக, இச்சீட்டுத் திட்டக் கடன்கள் காரணமாக புக்கிட் காயூ ஹித்தாமைச் சேர்ந்த ஒரு தம்பதியும் அவர்களின் மகனும் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி அப்பெண்ணும் 39 வயது நபரும் குபாங் பாசு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் கணவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
























