புக்கிட் துங்குவில் நடந்த சாலை விபத்தில் ஒரு போலீஸ் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

கோலாலம்பூர், ஜனவரி 16 :

நேற்று, இங்குள்ள ஜாலான் துங்கு, புக்கிட் துங்கு என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில், இஸ்தானா நெகாரா கிளையைச் சேர்ந்த ஒரு போலீஸ் அவுட்ரைடர் இறந்தார் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர், ஏசிபி சரிபுடின் முகமட் சாலே இதுபற்றிக் கூறுகையில், மாலை 6 மணியளவில் கவாசாகி ஜிடிஆர் மோட்டார் சைக்கிளில் சென்ற 46 வயது போலீஸ் அவுட்ரைடர், பேரோடுவா ஆக்ஸியா கார் மீது மோதியதில் விபத்துக்குள்ளானதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் காரின் வலது பக்கத்தில் இருந்த தனது வீட்டிற்குள் நுழைய வலதுபுறம் திரும்ப முயன்றபோது, காரும் அதே திசையில் திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் மோதியதாக அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் தலையில் காயம் அடைந்ததன் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காரை ஓட்டிச் சென்ற 31 வயது ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன் கீழ், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சரிபுடின் கூறினார்.

சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் ஜாலான் துன் எச்.எஸ் லீ போக்குவரத்து காவல் நிலையத்தை 03-2071 9999 என்ற எண்ணில் அல்லது வேறு ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here