கோலாலம்பூர், ஜனவரி 21 :
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான முன்பதிவின்றிய (walk-in basis) பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ProtectHealth Corporation Sdn Bhd ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆஃப்சைட் தடுப்பூசி மையங்களுக்கு (பிபிவி) முத்த குடிமக்கள் நேரடியாகச் சென்று தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
மேலும் முன்பதிவின்றிய (walk-in) பூஸ்டர் தடுப்பூசி செலுத்தச் செல்பவர்கள், தாங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதை நிரூபிக்க, MySejahtera செயலியைக் காட்ட வேண்டும் என்றும் அது அறிக்கையில் கூறியுள்ளது.
ஆஃப்சைட் பிபிவிகள் செயல்படும் நாட்களில் நண்பகல் 2 மணிக்கு முன்பதிவின்றிய (walk-in) சேவைகள் தொடங்கும் என்றும் அது கூறியது.
“MySejahtera வழியாக இன்னும் சந்திப்புகளைப் பெறாத 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் (மூத்த குடிமக்கள் தவிர) ஆனால் பூஸ்டர் ஷாட்டைப் பெற விரும்புவோர் www.protecthealth.com.my இணையதளத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்,” என்று அந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
ஆஃப்சைட் பிபிவிகள் என்பது தனியார் மருத்துவப் பயிற்சியாளர்கள் (PPS) மற்றும் அவர்களின் தனிப்பட்ட சுகாதார வசதிகளுக்கு வெளியே அரசுசார்பற்ற சுகாதார நிறுவனங்களால் இயக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.