மூவார், ஜனவரி 30 :
நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை (மூடா-MUDA) குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் இது இளம் வாக்காளர்களின் விருப்பங்களைத் தீர்மானிக்கும் ஒரு சோதனைக் களமாக பார்க்க வேண்டும் என்றும் கேத்தேரே (Ketereh) அம்னோ பிரிவு தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாடான மலேசியாவில், மூடா கட்சி உட்பட சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும், தங்கள் திறனை அளவிடுவதற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சராகவும் இருக்கும் அனுவார் தொடர்ந்து கூறுகையில், அம்னோ, முந்தைய மாநிலத் தேர்தலில் அது உருவாக்கிய வெற்றியை உதாரணமாகக் காட்டி, அரசியலில் பரந்த அனுபவமுள்ள தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற, இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றார்.
“இளைஞர்களுக்கு முடிந்தவரை பல வாய்ப்புகள் வழங்கப்படும் மற்றும் அம்னோ எப்போதும் அத்தகைய வாய்ப்புகளை வழங்கும் ஒரு கட்சியாகும், மேலும் எனக்கு 28 வயதாக இருந்தபோது தான் நான் முதல் தடவை வேட்பாளராக ஆனேன்”.
மேலும் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியாகப் போட்டியிடுவதற்கும், தங்கள் திறனைச் சோதிப்பதற்குமான வாய்ப்பை பயன்படுத்தி, தேர்தலில் பங்கேற்கும் புதிய கட்சிகளை (MUDA) நாங்கள் வரவேற்க வேண்டும், ” என்றும் அவர்களால் ‘சத்தம்’ மட்டுமே எழுப்ப முடியும் என்றும் அவர் கூறினார்.
“சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட யாரையும் (போட்டியிடுபவர்களை) நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது,” என்று அவர் இன்று இங்கு Dewan Seri Pekembar, Pagoh பிரிவைச் சேர்ந்த அம்னோ உறுப்பினர்களுடன் இன்று நண்பகல் நடந்த தேநீர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் மூடாவின் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, மூடா தலைவர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், மாநிலத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்பதை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.




















