சுங்கை பெசார், பிப்ரவரி 3 :
இங்குள்ள சுங்கை பஞ்சாங்கில் உள்ள பாரிட் 3 தைமூரில், இன்று வீட்டில் குப்பைகளை எரித்தபோது தீப்பற்றிக் கொண்ட மைவி பெரோடுவா கார் தீயில் எரிந்து நாசமானது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு உதவி இயக்குநர் ஹபிஷாம் முகமட் நூர் இதுபற்றிக் கூறுகையில், தமது துறைக்கு சம்பவம் தொடர்பில் காலை 10.46 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.
சுங்கை பெசார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் (BBP) இருந்து இயந்திரங்களுடன் நான்கு பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர், அந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
“சம்பவத்தின் போது, 38 வயதான கார் உரிமையாளர் அவரது குடும்ப வீட்டிற்குள் இருந்தார்.
“குப்பைகளை எரித்ததால் ஏற்பட்ட தீ விபத்து, சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கும் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
“வாகனத்தின் உரிமையாளர் தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றார், ஆனாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் அவர் தீயணைப்புத் துறையைத் தொடர்பு கொண்டார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
தீயணைப்பு படையினர் தீயை வெற்றிகரமாக அணைத்து, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஆனால் அந்தக் கார் 90 விழுக்காடு எரிந்து நாசமானது என்றும் ஹபிஷாம் கூறினார்.