பாகான் டத்தோ, பிப்ரவரி 16 :
ஊத்தான் மெலிந்தாங்கின் ஜாலான் தெப்பி சுங்கையில் உள்ள மீன்பிடி படகுத்துறை அலுவலகத்தில், இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் இறந்தார்.
கைகால்களில் தீக்காயங்களுக்கு உள்ளான 43 வயதான எங் சிங்க் ஹோய் என்ற ஆடவர், இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (MOH) மருத்துவ ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.
ஊத்தான் மெலிந்தாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் ஸுல்கப்லீ அப்துல்லா இச்சம்பவம்பற்றிக் கூறுகையில், காலை 7.26 மணிக்கு தங்களுக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்தது.
தகவல் கிடைத்ததும், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்களின் குழு அடுத்த நடவடிக்கைக்காக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
அவரது கூற்றுப்படி, தமது உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அலுவலக கட்டமைப்பு பகுதியின் சிறு பகுதி தீப்பிடித்திருப்பதை கண்டறிந்தனர்.
ஏற்கனவே தீயின் பெரும்பகுதி “வீட்டு நீர் குழாய் ரீல்களைப் பயன்படுத்தி பொதுமக்களால் அணைக்கப்பட்டது.
“இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தீக்காயமடைந்த நிலையில், சுயநினைவற்ற நிலையில் இருந்தார். இருப்பினும், மருத்துவக் குழுவால் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
மேலதிக நடவடிக்கைக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.