ஷா அலாம்:
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வீட்டிலிருந்தே பணியாற்றும்’ (WFH) திட்டத்தினால், அவர்கள் மருத்துவ விடுப்பு (MC) எடுக்கும் விகிதம் 30 விழுக்காடு குறைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் ஊழியர்களின் பணித்திறன் அதிகரித்துள்ளதோடு, மருத்துவ விடுப்பு எடுக்கும் போக்கும் கணிசமாகக் குறைந்துள்ளது.
தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 390 அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலகத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிற்குள் வசிக்கும் 284 ஊழியர்களுக்கு இந்த வசதி வழங்கப்படவில்லை.
மேலும், 109 ஊழியர்கள் தங்களின் பணித்தன்மை காரணமாக (Field work/Office presence) நேரடியாக அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி கூறுகையில், “இதற்கு முன்பு ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்காகப் பல்வேறு காரணங்களைக் கூறி வந்தனர். ஆனால், தற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் முறை வந்த பிறகு, அரசுக்கு மருத்துவ ரீதியாக ஏற்படும் செலவினங்கள் குறைந்துள்ளன,” என புதன்கிழமை (ஏப்ரல் 29) சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
பணிகள் ஆக்கபூர்வமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்த வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.



















