நியூயார்க் சாக்ரடீஸ் மாநகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி பைஸ்லி ஷட்டிஷ் என்பவரை அவர் பெற்றோர் காணவில்லை என்று கடந்த 2019-ம் ஆண்டு, ஜூலை மாதம் நியூயார்க் போலீஸில் புகார் அளித்திருந்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடினார்கள். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தற்போது அந்தச் சிறுமி கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து கடந்த திங்கள்கிழமை மீட்கப்பட்டிருக்கிறார்.
நியூயார்க் சாக்ரடீஸ் நகர் போலீசார் இது குறித்து கூறுகையில், “பைஸ்லி ஷட்டிஷ் என்னும் சிறுமி அவரின் ‘வளர்ப்பு பெற்றோர்கள்’ மூலம் கடத்தப்பட்டு, அவர்கள் வீட்டு மாடிப்படிக்கு கீழே உள்ள பேஸ்மெண்ட் ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தார். சிறுமி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீடு நியூயார்க் நகரம் சாக்ரடீஸ் டவுனில் ஹட்சன் ரிவர் வேல்லீ என்னும் இடத்தில் அமைந்திருந்தது. சிறுமி மீட்கப்பட்ட அறை மிகவும் சிறியதாகவும், குளிர் மற்றும் ஈரப்பதத்துடன் இருந்தது. சிறுமியை நல்ல ஆரோக்கியமான நிலையில் மீட்டிருக்கிறோம். சிறுமி தற்போது அவரின் சட்டப்பூர்வ பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டார்.
2019-ல் சிறுமியை அவரின் வளர்ப்பு பெற்றோரான கிம்பர்லி கூப்பர் மற்றும் கிர்க் ஷட்டிஷ் தம்பதியினர் கடத்தி வந்து தங்களது வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். நாங்கள் இந்தத் தம்பதியின் வீட்டிற்கு சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ய முயலும் போது, பெரும்பாலான நேரங்களில் இந்தத் தம்பதியினர் எங்களை அனுமதிக்கமாட்டார்கள்.
மேலும், வீட்டிற்கு முன் கேமரா வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் சோதனைக்கு சென்றாலும், உடனே சிறுமியை மாடிப்படிக்கு கீழே இருக்கும் ரகசிய அறையில் அடைத்து வைத்து விடுவார்கள். அந்த வகையில், கடந்த திங்கள்கிழமை எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் வீட்டில் மாடிப்படியை சிறப்புக் கருவி மூலம் உடைத்துக் கொண்டு சோதனை செய்தோம். அப்போது, சிறுமியின் பாதம் தெரிந்தது. அதையடுத்து, அந்த அறையை உடைத்து உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டோம். 4 வயதில் கடத்தப்பட்ட சிறுமி தற்போது 6 வயதில் மீட்கப்பட்டிருக்கிறார்.
சிறுமியின் வளர்ப்பு பெற்றோர்களான கிம்பர்லி கூப்பர் – கிர்க் ஷட்டிஷ் தம்பதியினர் மீது குழந்தை நலனுக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் குழந்தை காவல் முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என்றனர்.