அலோர் ஸ்டார், பிப்ரவரி 27 :
போக்கோக் சேனாவின் மதரசா தாருல் உலும் அருகே, இன்று பெரோடுவா பெஸ்ஸா கார் மீது ஹோண்டா வகை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் முஹமட் ஹபீஸ் மெலி, 28, மற்றும் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த சித்தி நூர் நஜ்வா ஹரிஸ் ஃபாசிலா, 27, என அடையாளம் காணப்பட்டனர்.
இந்த விபத்தில் பெரோடுவா பெஸ்ஸா கார் தலை கீழாக கவிழ்ந்தது.
கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் ஷுக்ரி மாட் அகிர் கூறுகையில், போக்கோக் சேனா திசையிலிருந்து கோலா நெராங் நோக்கிச் சென்ற 25 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற பெரோடுவா பெஸ்ஸா கார், எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்தச் சம்பவம் காலை 7.20 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
“விபத்தில் காயமடைந்த பெரோடுவா பெஸ்ஸா கார் ஓட்டுநர், சுல்தானா பஹியா மருத்துவமனையில் (HSB) சிகிச்சை பெற்று வருகிறார்.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.