மீன் பிடிக்கும் குளத்தில் மூழ்கி முதியவர் மரணம்

சிகாமாட், மார்ச் 1 :

இங்கு போகோ, கம்போங் கெனாவரில் உள்ள மீன்பிடிக்கும் குளத்தில் மூழ்கி, முதியவர் ஒருவர் இன்று இறந்து கிடந்தார்.

73 வயதான லியாவ் குவான் @ லியூ குவான் யிக், இன்று காலை மீன்பிடிக்கும் குளப்பகுதிக்கு சென்றதன் பின்னர், அவரைக் காணவில்லை.

பண்டார் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர், மூத்த தீயணைப்பு துணை கண்காணிப்பாளர் மர்சுகி இஸ்மாயில் இதுபற்றிக் கூறுகையில், சம்பவம் தொடர்பாக தங்களுக்கு காலை 10.57 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், 11 உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரைத் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை கிராம மக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது, பாதிக்கப்பட்டவர் தவறி குளத்தினுள் விழுந்ததாக நம்பப்படுகின்றது என்றார்.

காலை 11.20 மணியளவில் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர்.

“அவரது உடல் குளத்தின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் மருத்துவக் குழுவால் அவர் இறந்து விட்டார் என உறுதிப்படுத்தப்பட்டது ” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. காலை 11.57 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவடைந்தது.

இதற்கிடையில், சிகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் பஹ்ருடின் முகமட் நோஹ்வைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார், மேலும் வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டது என்றும் சடலம் சிகாமாட் வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here