பாசீர் மாஸ், மார்ச் 12 :
கிளாந்தான், மலேசியா-தாய்லாந்து எல்லை எதிர்வரும் ஏப்ரல் 1-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டவுடன், பொது செயல்பாட்டுப் படை (GOF) உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் கட்டுப்பாட்டைக் கடுமையாக்குவார்கள் என்று மாநில துணை போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் கூறினர்.
எல்லைப் பகுதிகளைச் சுற்றியுள்ள 92 சட்டவிரோத தளங்களில் போலீசார் ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள். இதனால் “ கோவிட்-19 பரவுவதைத் தடுப்பது , நிலையான இயக்க நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வது, கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பது என்பவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மேலும், எல்லைகள் திறப்பதனால் “நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், கிளாந்தான் காவல்துறை எந்த நிலைமைகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது,” என்று, இன்று ரந்தாவ் பஞ்சாங்கில் நடந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை வழங்கும் நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.