ஜார்ஜ்டவுன், மார்ச் 16 :
மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (CIDB) பினாங்கு லெபுக் கார்ட்ஸில் (Lebuh Kartz) உள்ள ஒரு கட்டுமானத் திட்டத் தளத்தை நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) மற்றும்சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்கத் தவறியதற்காக இன்று மூடப்பட்டது.
காலை 9.30 மணிக்கு, மலேசிய குடிவரவுத் துறை (JIM), ராயல் மலேசியன் போலீஸ் (PDRM), தேசியப் பதிவுத் துறை (JPN) மற்றும் பினாங்கு நகர சபை (MBPP) ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர், இக்கட்டுமானத் தளம் மூடப்பட்டது.
மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியத்தின் பணிப்பாளர் ஜாஹிடி ஹாஷிம் கூறுகையில், கட்டுமான தளத்தின் செயல்பாடு குறித்து தமது துறையினர் உளவுத்துறைக்கு சமீபத்தில் அளித்த தகவலின் பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டது.
அவ்வளாகத்தை ஆய்வு செய்ததில், 35 தொழிலாளர்களில் 18 பேரிடம் கட்டுமான பணியாளர் அட்டையோ, கிரீன் கார்டோ இல்லை என்றார்.
“மற்றும் 15 தொழிலாளர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) அந்தஸ்துள்ள அட்டைதாரர்களாக உள்ளனர், ஆனால் அவர்கள் கட்டுமான தளங்களில் வேலை செய்ய முடியாது.
“இந்த கட்டுமானத் திட்டமானது RM33 மில்லியன் மதிப்புடையதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் எங்கள் மதிப்பாய்வு RM70 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகியிருப்பதாக நம்புகிறோம் ” என்று அவர் கூறினார்.
ஜாஹிடியின் கூற்றுப்படி, எஸ்ஓபி மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்கத் தவறியதுடன் கட்டுமான தொழில் குற்றத்தைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் சட்டத்திற்கு இணங்கும் வரை கட்டுமான தளத்தை மூட உத்தரவிடப்பட்டது.
மேலும் அங்கு மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (திருத்தம்) சட்டம் 2011 இன் பிரிவு 34B (1) (b) சம்பந்தப்பட்ட குற்றங்களும் சாட்டப்பட்டன.
“மேலும் சோதனை மேற்கொண்ட போது சில தொழிலாளர்கள் தப்பித்துள்ளனர் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், கட்டுமான தளத்தில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பொது நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.










