நீலாய், மார்ச் 18:
ஜாலான் பெர்சியாரன் புசாட் பண்டார் போக்குவரத்து விளக்கு சந்திப்பில், இரட்டை அடுக்கு விரைவுப் பேருந்து ஒன்று பிரேக் பிரச்சனை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தில் மோதியது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஃபாஸ்லி அப்துல் ரஹ்மான் கூறுகையில், பேருந்து ஜெர்டே, திரெங்கானுவில் இருந்து நீலாய் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டது என்றார்.
“39 வயதுடைய நபர் பேருந்தினை ஓட்டிச் சென்றார். சம்பவத்தின் போது, மற்றொரு ஓட்டுநர் மற்றும் நான்கு பயணிகளும் அப்பேருந்தில் இருந்தனர்.
“இருப்பினும், அந்த இடத்திற்கு வந்தவுடன், பேருந்து பிரேக் பிடிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் உள்ள மின்கம்பத்தில் மோதியது,” என்று அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது, மேலும் ஐந்து பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
சாலைப் போக்குவரத்து விதிகள் 1959 (விதி 10 LN 166/59) விதி 10ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.