இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்லியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் கன்டோலி தேசிய பூங்கா பகுதிக்குள், நான்கு பேர் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காகச் சென்றனர். அவர்கள் நான்கு பேரும் கொங்கன் பகுதியிலிருந்த காட்டுக்குள் வேட்டை விலங்குகளை தேடி அலைந்தனர்.
ஆனால் அவர்களின் கண்ணில் பல்லி வகையைச் சேர்ந்த மானிட்டர் பல்லி (Monitor lizard) ஒன்று தென்பட்டது. உடனே மங்கேஷ், சந்தீப், ஜனார்தன், அக்ஷய் ஆகிய நான்கு பேரும் அந்த பல்லியைப் பிடித்து, அதை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களின் அக்கொடூரச் செயல்களை தங்களது மொபைல் போனிலும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.
நான்கு பேர் சட்டவிரோதமாகக் காட்டில் துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருப்பதை வனத்துறை அதிகாரிகள் காட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்தனர்.
உடனே அவர்கள் வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து செயல்பட்டு நான்கு பேரையும் பிடித்து வந்து விசாரித்தனர். அதோடு அவர்களிடம் இருந்த மொபைல் போனை சோதித்துப் பார்த்தபோதுதான், அவர்கள் மானிட்டர் பல்லியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல்லி பெங்கால் மானிட்டர் இனத்தைச் சேர்ந்தது. இந்த வகை பல்லி பாதுகாக்கப்பட்ட விலங்காக வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நான்கு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு ஏழு ஆண்டுகல் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.