கூச்சிங், ஏப்ரல் 18 :
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) துணை இயக்குநர் (உளவுத்துறை/செயல்பாடுகள்) டத்தோ முகமட் அஸ்மான் அஹமட் சப்ரி சரவாக்கின் புதிய காவல்துறை ஆணையராக இன்று பதவியேற்றுள்ளார்.
இதுவரை சரவாக் காவல்துறை ஆணையராக பணியாற்றிய டத்தோ மஞ்சா அன்டா முகமட் அஸ்மானிடம் பணியை ஒப்படைக்கும் விழா இன்று சரவாக் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோ ஹசானி கசாலி நேரில் சென்று கலந்து கொண்டார்.
சரவாக்கின் புதிய காவல்துறை ஆணையராக பதவியேற்ற முகமட் அஸ்மான் தனது உரையில், தனது நியமனத்தை ஒரு கௌரவமாகவும், காவல்துறைத் தலைவர் (IGP), டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா வழங்கிய ஆணையாகவும் கருதுவதாகக் கூறினார்.
“குற்றங்களைத் தடுப்பதில் நான் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். ஆனால், சரவாக் போலீஸ் கமிஷனராக எனது கடமைகளை நிறைவேற்ற ஐஜிபி கொடுத்த நம்பிக்கையுடன், என்னால் முடிந்ததைச் செய்வேன்.
“சமூகத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து சிறந்ததை வழங்குவதற்கு சரவாக் குழு மற்றும் ரோயல் மலேசியா காவல்துறை (PDRM) பணியாளர்களின் ஆதரவையும் நான் நாடுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.