ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 27 :
கடந்த புதன்கிழமை, புக்கிட் கம்பீரில் நடந்த சம்பவத்தில், இந்தோனேசியப் பெண் ஒருவரை மானபங்கப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டதற்காக, உணவு விநியோகஸ்தருக்கு RM4,000 அபராதம் மற்றும் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முகமட் ஃபலிஹின் அப்துல் தாலிப், 28, என்பவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூர் மெலாத்தி டயானா அப்துல் வகாப் முன்நிலையில் வாசிக்கப்பட்டவுடன், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றச்சாட்டின்படி, நூர்மலிஸ் எனப்படும் இந்தோனேசியப் பெண்ணின் கௌரவத்தை மீறும் நோக்கத்துடன் அவரது உடல் உறுப்பினை தொட்டதாக முகமட் ஃபாலிஹின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஏப்ரல் 20 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் இங்குள்ள ஜாலான் புக்கிட் கம்பீரில் குற்றம் சாட்டப்பட்டவர் அக்குற்றத்தை செய்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்கில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இந்த வழக்கை அரசு துணை வழக்கறிஞர் நஸ்ரி அப்துல் ரஹீம் கையாண்டார், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் எஸ். பொம்மி ஆஜரானார்.
விசாரணை முடிந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவர் அபராதத்தை செலுத்தியதாக தெரிகிறது.
வழக்கின் உண்மைகளின்படி, சம்பவத்தின் போது, சுங்கை நிபோங் திசையில் இருந்து ஜாலான் புக்கிட் கம்பீர் போக்குவரத்து விளக்குக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணை பின்னால் இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குற்றஞ்சாடடப்படட்டவர் அணுகி அவரது பாலியல் உறுப்புகளை அழுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
பாதிக்கப்பட்ட பெண் சுங்கை நிபோங் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் விளைவாக, சந்தேக நபர் ஏப்ரல் 24 அன்று மாலை 4.45 மணிக்கு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.