பேராக் கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் கடத்தல் வேட்டையில் 108 இந்தோனேசியர்கள் கைது

பேராக், மன்ஜங் கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில், 103 புலம்பெயர்ந்தோர் மற்றும் படகு ஊழியர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் உட்பட 108 இந்தோனேசியர்களை நேற்று காவல்துறை கைது செய்தது. இந்தக் கடத்தல் நடவடிக்கையில் படகு கேப்டன், உதவி கேப்டன் மற்றும் கடலோரக் கண்காணிப்பாளர்களாகச் செயல்பட்டதாகச் சந்தேகத்தின் பேரில், 19 முதல் 60 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.

மேலும், எட்டு மாதங்கள் முதல் 68 வயதுக்குட்பட்ட 67 ஆண்கள், 33 பெண்கள், மூன்று சிறுவர்கள் மற்றும் நான்கு சிறுமிகள் உட்பட 103 இந்தோனேசிய நாட்டினரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். மேலும், சந்தேக நபர் ஒருவரின் உடைகள் மற்றும் உடமைகளிலிருந்து 5.8 கிலோகிராம் ஷாபு என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய 22 பொட்டலங்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் யாருக்கும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை என்றும், புலம்பெயர்ந்தோர் சிறிய ‘பாம் பாம்’ படகுகளைப் பயன்படுத்தி மன்ஜங் கடற்கரை வழியாக உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என குமார் கூறினார். ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரிடமிருந்தும் RM800 முதல் RM1,800 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது, இது போக்குவரத்து நிறுவனங்களுக்கும் முகவர்களுக்கும் ரொக்கமாக வழங்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 (அடிப்சம்)-இன் பிரிவு 26A, குடிவரவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c), மற்றும் அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 39B ஆகியவற்றின் கீழ் மேலதிக விசாரணைக்காக அவர்கள் மன்ஜங் காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேசிய கடல் எல்லைகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை காவல்துறை தொடர்ந்து வலுப்படுத்தும், மேலும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்புடனும் சமரசம் செய்துகொள்ளாது. அடிப்சம் 2007-இன் கீழ் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here