மோட்டார் சைக்கிள் மீது லோரி மோதியதில் 15, 11 வயதுடைய சகோதரிகள் பலி!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 27:

இங்குள்ள ஜாலான் PJS 3/2, தாமான் மேடான் என்ற இடத்தில் நேற்று, மோட்டார் சைக்கிள் மீது லோரி மோதிய விபத்தில் இரண்டு உடன்பிறப்புகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் இதுபற்றிக் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு நேற்று இரவு 8.54 மணிக்கு அறிக்கை கிடைத்தது.

“முதற்கட்ட விசாரணையில், 15 வயது மற்றும் 11 வயது சிறுமி ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

“விபத்தின் விளைவாக இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

35 வயதான லோரி ஓட்டுநருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தடயவியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

“சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், வழக்கு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ரோசிலா ஹூசைனை 0162679025 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here