மலாக்கா, மே 16 :
இன்று ஆசாஹானில் உள்ள லாமா திகா புடாயா நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்த பார்வையாளர்கள், அங்கு பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கினர். ஜாசின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அங்கி சிக்கிக்கொண்ட 60 பார்வையாளர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
நண்பகல் 1 மணியளவில் அங்கு சிக்கிக்கொண்ட பார்வையாளர்களில் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றவுடன், 27 நிமிடங்களில் தீயணைப்பு இயந்திரத்தில் நான்கு பேரை அடக்கிய குழு, அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக செயல்பாட்டுத் தளபதி முகமட் ரிட்சுவான் சுலிமான் கூறினார்.
“சிக்கிக்கொண்ட பார்வையாளர்களில் 60 பேர் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர், மேலும் 20 பேர் தொடர்ந்து நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க முடிவு செய்தனர்.
“இருப்பினும், தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் நிலைமை மிகவும் பாதுகாப்பாக மாறும் வரை அவர்களின் முகாம் அமைத்து தங்கும் செயல்பாடுகளை குறைக்குமாறு அறிவுறுத்தினர்,” என்று அவர் இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
மேலும் ஆற்றின் ஆழமற்ற பகுதியைக் கடந்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாகக் கொண்டு வர மீட்புக் குழு உதவியது என்றார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.