கோலாலம்பூர், மே 21 :
தேசிய உயிரியல் பூங்காவிலிருந்து புலி தப்பித்து சென்றுவிட்டதாக, சமூக வலைதளங்களில் வைரலான காணொலி தொடர்பில், அதன் வளாகத்தில் இருந்து புலிகள் எதுவும் தப்பவில்லை என தேசிய உயிரியல் பூங்கா நிர்வாகம் உறுதி செய்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள உலு கெலாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியான கெமென்சா ஹைட்ஸ் பகுதியில், புலி ஒன்று இருப்பதாகக் கூறப்படும் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவைத் தொடர்ந்து, நிர்வாகம் இதனை தெரிவித்தது.
இருப்பினும், அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரூக் எஷாக் கூறுகையில், காவல்துறை மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறை (பெர்ஹிலிதான்) ஆகியவையும் புலி தொடர்பில் தேடுதலைத் தொடங்கியுள்ளன. இந்த முழுமையடையாத இந்த தகவல் காரணமாக, இதுவரை எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை,
காட்டு விலங்கு குறுக்கே வந்ததாகக் கூறப்படும் அந்த பாதுகாவலரை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவரைப் பற்றிய கூடுதல் தகவல் போலீசாரிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
“குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நாங்கள் அப்பகுதியைச் சுற்றி ரோந்துகளை முடுக்கிவிட்டுள்ளோம்,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முகமட் ஃபாரூக்கின் கூற்றுப்படி, தேசிய பூங்காத் துறையினர் இன்னும் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், ஆனால் சம்பவம் தொடர்பாக இதுவரை போலீஸ் அறிக்கைகள் எதுவும் பெறப்படவில்லை மற்றும் சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களை வழங்க முன்வரவில்லை.
தகவல் தெரிந்தவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார், அதே நேரத்தில் சரிபார்க்கப்படாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.
இந்த வைரலான வீடியோ, கெமென்சா ஹைட்ஸ் பகுதியில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறி, ஒரு வெளிநாட்டுப் பாதுகாவலரால் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.









