அலோர் ஸ்டார், மே 22 :
தஞ்சோங் சாலி அருகே உள்ள கெடா ஆற்றில், இன்று முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்து கிடக்க காணப்பட்டார்.
கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் முகமதுல் எஹ்சான் முகமட் ஜெய்ன் கூறுகையில், 60 வயது முதியவரின் உடல் ஆற்றில் மிதப்பது பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு , அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மூத்த தீயணைப்பு அதிகாரி (PBK) II முகமட் கைரி சே லா தலைமையிலான ஜலான் ராஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு, காலை 8.13 மணிக்கு அழைப்பைப் பெற்று அந்த இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.
“இடத்திற்கு வந்து பார்த்தபோது, ஆற்றில் மூழ்கியதாக நம்பப்படும் ஒருவரின் சடலம் இருந்தது.
“தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் முதியவரின் சடலத்தை ஆற்றிலிருந்து கயிறு மற்றும் சிறப்பு உபகரணங்கள் மூலம் மீட்டனர். பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
காலை 8.38 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிந்ததாக முகமதுல் எஹ்சான் கூறினார்.