பாசீர் பூத்தே, மே 27 :
புக்கிட் யோங்கில் நடந்த சம்பவத்தில் தனது தாயை கத்தியால் குத்திய படிவம் இரண்டு மாணவர், நேற்று நண்பகல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பாசீர் பூத்தே மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் ஜெய்சுல் ரிசல் ஜகாரியா கூறுகையில், மாணவனை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
“புதன்கிழமை மாலை முதல் நேற்று மாலை வரை ஒரு நாள் மட்டுக் அந்த மாணவரை தடுப்பு காவலில் வைத்திருந்தோம்.
“அவர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டபோது, மாணவர் இன்னும் அதிர்ச்சி நிலையில் இருந்தார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடமிருந்து, சம்பவம் குறித்த அறிக்கையைப் பெறுவதற்கு காத்திருப்பதாகவும் ஜெய்சுல் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் இப்போது நிலையாக இருக்கிறார், ஆனால் விசாரணையைத் தொடர்வதற்கு முன் பாதிக்கப்பட்டவர் குணமடைய முதலில் இடம் கொடுப்போம்,” என்று அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.45 மணியளவில் 14 வயது மாணவன் தனது தாயின் இடது மார்பில் கத்தியால் குத்தினான்.
சந்தேகநபர் இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக வந்த மாயத்தோற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மேலும், பாதிக்கப்பட்டவரின் 41 வயதான தாய் தற்போது யுனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.