பாசீர் மாஸ், மே 29 :
ஜூன் 1 முதல் மலேசியா-தாய்லாந்து எல்லை மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, வார இறுதி நாட்களில் தாய்லாந்தில் இருந்து சுமார் 1,000 தனியார் வாகனங்கள் கிளாந்தானுக்குள் நுழையும் என சாலைப் போக்குவரத்துத் துறை எதிர்பார்க்கிறது என்று கிளாந்தான் ஜேபிஜே இயக்குநர் முகமட் மிசுவாரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் நுழைபவர்கள் மூன்று மாநில நுழைவு சோதனைச் சாவடிகள் வழியாக உள்ளே வருவார்கள், அதாவது ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள எல்லைச் சோதனைச் சாவடி, பெங்கலான் குபோர் மற்றும் புக்கிட் பூங்கா சோதனைச் சாவடிகளின் மூலமாக உள்நுழைவார்கள் என கூறினார்.
“நாட்டிற்குள் நுழைய விரும்பும் வெளிநாட்டு தனியார் வாகனங்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOP) இணங்க வேண்டும்.
“எல்லை தாண்டிய அனுமதிகளைப் பொறுத்தவரை, அவை குடிநுழைவுத் துறையால் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு உட்பட்டவை” என்று அவர் இன்று நடந்த ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.
வெளிநாட்டு வாகனங்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாகனப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றால், எல்லைக் கட்டுப்பாட்டு நிலையங்களில் அனைத்துலக சுழற்சி அனுமதிகளை (ICP) திணைக்களம் வழங்கும் என்று முகமட் மிசுவாரி கூறினார்.
“அத்தோடு, அனைத்துல சுழற்சி அனுமதி விண்ணப்பப் படிவத்தை (JPJK9), பயணிகள் அறிவிப்புப் படிவம் (JPJK9A) பூர்த்தி செய்தல் மற்றும் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் (ஓட்டுனர்/உரிமையாளர்), வாகனப் பதிவுச் சான்றிதழின் நகல் மற்றும் பலவற்றை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில், தனியார் வாகனங்கள் இப்போது நுழைய அனுமதிக்கப்படுவதால், எல்லையின் இருபுறமும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.









