பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10:
கிளாந்தான், கேம்பிங் ரெபேக்கின் சாலையோரத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அவரை காரிலேயே விட்டு விட்டு தப்பித்துச் சென்றதாகக் நம்பப்படும் ஒருவரை போலீசார் தேடுகின்றனர்.
பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் நசாருடின் முகமட் நசீர் கூறுகையில், சந்தேக நபர் 21 வயதுடையவர் என்றும், பொதுவாக அய்மே என்று அழைக்கப்படுபவர் என்றும், அவர் பாசீர் மாஸில் உள்ள கம்போங் பாக் ஜாக்கைச் சேர்ந்தவர் என்றும் அறியப்படுவதாக கூறினார்.
சந்தேக நபரை அறிந்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி நோர் மசூரா யாக்கோப்பை 013-9405819 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஃபாரா எமிரா மஸ்லான், 26, கடந்த சனிக்கிழமையன்று வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காரில் சடலமாக மீட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அப்பெண்ணிற்கு ஏற்கனவே 3 முதல் 10 வயது வரையிலான மூன்று குழந்தைகள் உள்ளனர்
கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.