சிரம்பான், ஜூன் 14 :
பல மணிநேரம் தொடர்ந்து பெய்த கனமழையை அடுத்து, நேற்று இரவு இங்குள்ள ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயில், தாமான் புக்கிட் செந்தோசாவில் நிலச்சரிவு ஏற்பட்டது, இதன் காரணமாக அங்குள்ள தெனாகா நேஷனல் பேர்ஹாட்டின் துணை மின்நிலையம் பாதிக்கப்பட்டது.
இரவு 8.05 மணியளவில் ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிரம்பான் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி பிஜிகே II ஜெஃப்ரி உசுஸ் தெரிவித்தார்.
“நிலச்சரிவால் துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றி சேதமடைந்தது. மேலும் அங்கிருந்த மரங்கள் சரிந்து விழுந்ததில் Mercedes Benz மற்றும் Volvo ஆகிய இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.
“இருப்பினும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.