கோம்பாக், ஜூன் 21:
இங்குள்ள தாமான் சமுதேரா அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், அதிகாலை 5.25 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.
“பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் தீ விபத்து ஏற்பட்டது என்ற தகவலைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பொதுமக்களால் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
அவரது கூற்றுப்படி, மூன்று மோட்டார் சைக்கிள்கள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும், மற்றய 4 மோட்டார் சைக்கிள்கள் 10 முதல் 70 விழுக்காடு வரை அழிக்கப்பட்டு விட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
“இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் காலை 6 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிந்தது என்றும் தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பீடு பற்றிய விஷயங்கள் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.