கோலாலம்பூர், ஜூன் 26 :
செபூத்தேயில் உள்ள தாமான் கெம்பீராவிலுள்ள ஒரு பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட, தாயும் மகனும் உடல் கருகிப் பலியாகினர்.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் ரோசிஹான் அன்வர் மாமட் கூறுகையில், சம்பவம் தொடர்பாக காலை 6.22 மணிக்கு தமது துறைக்கு அழைப்பு வந்தது.
“அதைத் தொடர்ந்து, செபூத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் , ஸ்ரீ பெட்டாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் ஹாங் துவா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகிய நான்கு இடங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
“காலை 6.54 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது மற்றும் 7.12 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. மேலும் அங்கு இரண்டு பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது,” என்று அவர் இன்று சம்பவ இடத்தில் சந்தித்தபோது கூறினார்.
அவர் கருத்துப்படி, ஆறு பேர் கொண்ட குடும்பம் வசிக்கும் மூன்று மாடி பங்களா வீட்டில் இந்த தீ விபத்து இடம்பெற்றதாக கூறினார்.
“பலியானவர்கள் 61 வயதான தாய் மற்றும் 27 வயது மகன் என நம்பப்படுகிறது, அவர்கள் இருவரும் தனித்தனி அறைகளில் இருந்தனர்.
“வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து துவங்கிய தீ, தரை தளத்திற்கு பரவியதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தீயினால் காயங்களுக்குள்ளான மற்றய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இவ்விபத்திற்கான காரணம் மற்றும் இழப்பின் அளவு குறித்து மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.