PKR முன்னாள் தலைவர்கள் திரும்புவதற்கான அன்வரின் அழைப்பை தியான் சுவா வரவேற்கிறார்

 2023இல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, PKR-ன் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தியான் சுவா, கட்சியின் மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்ற கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை வரவேற்றுள்ளார்.

மேலும், அன்வாரின் அழைப்பின் பேரிலேயே கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார். அவர் தனது செய்தியைத் தெளிவாகக் கூறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். ஓரங்கட்டப்பட்டதாக உணர்பவர்கள் உட்பட, மூத்த தலைவர்கள் திரும்பி வந்து கட்சியை வலுப்படுத்த உதவ வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அவர்  கூறினார்.

கட்சியில் மீண்டும் இணைகிறீர்களா என்று கேட்டதற்கு, தியான் சுவா, “அது அன்வாரின் முடிவு. எனது உறுப்பினர் பதவியை அதே உறுப்பினர் எண்ணுடன் மீண்டும் வழங்குவது அன்வாரின் கையில்தான் உள்ளது,” என்று பதிலளித்தார்.

2022இல் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டதற்காக தியான் சுவா PKR கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். PKR கட்சியைச் சேர்ந்த பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் பி. பிரபாகரன், கடும் போட்டிக்கு மத்தியில் நடைபெற்ற 10 முனைப்பில் அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.

இன்று முன்னதாக நடைபெற்ற PKR மாநாட்டில் தனது சிறப்புரையில், அன்வர் மன்னிப்புக் கோரியதோடு, கட்சியின் மூத்த தலைவர்கள் PKR-க்குத் திரும்புமாறும் வலியுறுத்தினார். பழைய தலைமுறையினரே, ஓரளவு ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்திருக்கக்கூடிய எனது மற்ற நண்பர்களே, நாங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நமது போராட்டப் பாதைக்குத் திரும்புவோம் என்று அவர் கூறினார்.

முன்னாள் இரண்டு முறை பத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தியான் சுவா, அன்வாரின் வேண்டுகோள் கட்சியை ஒருங்கிணைப்பதற்கும் சீர்திருத்த இயக்கத்தை வலுப்படுத்துவதற்குமே என்று கூறினார். கட்சிக்குள் கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பல்லின மலேசியாவில் PKR ஒரு முக்கியமான அரசியல் சக்தியாகத் தொடர்கிறது என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹரப்பானின் சீர்திருத்தத் திட்டங்கள் இருந்தபோதிலும், அடையாள அரசியலால் PKR தொடர்ந்து பலவீனப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். பக்காத்தான் ஹரப்பானுக்கு எதிரான உணர்வு வலுவாக உள்ளது என்றும், அதே நேரத்தில் PKR-இன் அடிமட்ட ஆதரவும் தேர்தல் இயந்திரமும் பல ஆண்டுகளாக பலவீனமடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த நிலையில், அனைவரும் “மீண்டும் வேலைக்குத் திரும்புவது” முக்கியம் என்று தியான் சுவா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here