பெனாம்பாங், ஜூலை 2:
எதிர்வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில், பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை ஆதரிக்க அம்னோ மற்றும் பாரிசான் நேசனல் கட்சி என்பன தெளிவான கொள்கையைக் கொண்டுள்ளன என்று பாரிசான் நேசனல் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் கூறினார்.
எனவே, கட்சிக் கொள்கைக்கு எதிராகச் சென்ற சில தனிநபர்களின் கருத்துக்கள் அம்னோ அல்லது பாரிசான் நேசனலின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அம்னோ துணைத் தலைவர் கூறினார்.
நாட்டின் பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு அம்னோவும் பிஎன்னும் தங்கள் உண்மையான ஆதரவை உறுதியளித்ததாகவும் அவர் வலியுறுத்தினார், மேலும் கட்சி அல்லது கூட்டணியில் உள்ள எந்த பகுதியினரும் இஸ்மாயில் சப்ரியின் தலைமையின் மீது எந்தக் குறைகூறல்களையும் முன்வைக்கவில்லை என்றும் கூறினார்.
“எங்கள் போஸ்டர் பாய் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் என்று கொள்கை தெளிவாகக் கூறுவதால், ஓரிருவரின் வார்த்தைகளை கட்சியின் கொள்கையாகப் பார்க்க முடியாது,” என்று அவர் இன்று சபா பிஎன் மாநாட்டை நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.