காஜாங்கிலுள்ள பலசரக்கு கடையில் தீப்பரவல்; ஆடவர் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்பு

காஜாங், ஜூலை 3 :

இங்குள்ள ஜாலான் ரெகோவில் உள்ள ஒரு பலசரக்குக் கடையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், ஒருவர் தலை மற்றும் உடல் முழுவதும் எரிந்த நிலையில் மயங்கி கிடந்தபோது தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், இன்று நண்பகல் 1.08 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

“காஜாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், பாங்கி மற்றும் செமினி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவற்றிலிருந்து ஐந்து வாகனங்களுடன் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று மாடி கடை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

கட்டிடத்தின் அவசர படிக்கட்டுகளில் மயங்கிய நிலையில் காணப்பட்ட 35 வயதுடைய ஒருவரை, தமது துறையினர் மீட்டு வெளியே கொண்டு வர முடிந்தது என்று நோராஸாம் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் தலை மற்றும் உடலில் பலத்த தீக்காயங்களுடன் இருந்தார், அத்தோடு அவர் அவ்வளாகத்தின் ஊழியர் என்று நம்பப்படுகிறது.

மேலும் “பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

நண்பகல் 1.32 மணியளவில் தீயணைப்பு படையினரால் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here