பாலிங், ஜூலை 5 :
நேற்று சுங்கை குபாங்கில் நீர் மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, நேற்று அம்மாவட்டத்தில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,426 பேர் 3 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மொத்தம் 202 பேர் செக்கோலா கேபாங்சான் (SMK) ஜெரையிலும், 186 பேர் சூராவ் அன்-நூர் தாமான் மேஸ்ராவிலும், 1038 பேர் செக்கோலா மேனென்கா அகமா யாயாசான் கைரியா குபாங்கிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலிங் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி, கேப்டன் ரசிதா காசிம் கூறுகையில், “நாங்கள் இரண்டாவது வெள்ளம் குறித்து கவலைப்படுகிறோம், அதுவரை பாதிக்கப்பட்டவர்களை வீடு திரும்ப அனுமதிக்க மாட்டோம் ” என்றார்.
“திறக்கப்பட்டுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்திலுள்ள மக்களை சுகாதார அமைச்சகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் சந்தித்து, அவர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பினை வழங்குகின்றனர், அது தவிர அங்குள்ள அனைத்து பொதுமக்களும்பாதுகாப்பாக உள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.