கோலாலம்பூர், ஜூலை 15 :
இந்த ஆண்டு, இதுவரை 19 தடுப்புக் காவல் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாககவும் அது தொடர்பில் ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கத் துறையின் (JIPS) குற்றவியல் மற்றும் தடுப்புக் காவலில் உள்ள மரண விசாரணைப் பிரிவு (USJKT) அவற்றை விசாரித்து வருவதாகவும் புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர்களில் 14 மலாய்காரர்கள், ஒரு சீனர், ஒரு இந்தியர் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் அடங்குவர் என்று காவல்துறை செயலாளர் துணை ஆணையர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் கூறினார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 15) நிலவரப்படி, லாக்கப்பில் இறந்த 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
“மேலும் மருத்துவமனைகளில் 8 இறப்பு வழக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியில் 2 இறப்பு வழக்குகள் ஆகிய மொத்தம் 19 வழக்குகள் உள்ளன ” என்று வெள்ளிக்கிழமை சுஹாகாம் மற்றும் அமலாக்க முகமை நேர்மை ஆணையம் (EAIC) உடனான தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மரணம் குறித்த சந்திப்பிற்குப் பிறகு, அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்த ஆணைக்குழுக்களது வருகையானது மத்திய லாக்கப் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.









