ஷா ஆலாம், ஜூலை 17 :
இங்குள்ள ஷா ஆலம் பானாசோனிக் தேசிய விளையாட்டு வளாகத்தில் நேற்று இரவு 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்ட Bon Odori திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் மாலை 4 மணி முதல் வளாகத்தின் மக்கள் நிரம்பி வழிந்ததை காணக்கூடியதாக இருந்தது.
சிலாங்கூர் சுற்றுலாத்துறையின் முதன்மை செயல் அதிகாரி, அஸ்ருல் ஷா முகமட் கூறுகையில், 46-ஆவது Bon Odori திருவிழாவிற்கு பார்வையாளர்களின் வருகை கடந்த 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டதை விட அதிகரித்துள்ளது.
“இந்த நிகழ்வை இனிதே நடத்த துணைபுரிந்த இறைவனுக்கு நன்றி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த திட்டம் தாமதமானது. இதற்கு முன்னர் கலந்துகொண்டவர்களிலும் பார்க்க இம்முறை அதிகளவான பார்வையாளர்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்சியாக உள்ளது ”என்று அவர் விழாவில் சந்தித்தபோது கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் ஜப்பானிய கலாச்சார விழாவைக் கண்டுகளிக்க சிலாங்கூர் மந்திரி பெசார், டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி இரவு சுமார் 8.15 மணியளவில் வந்திருந்தார். அவரை மலேசியாவுக்கான ஜப்பானிய தூதர் தகாஹாஷி கட்சுஹிகோ வரவேற்றார்.
“மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை ஜப்பான் பெரிதும் மதிக்கிறது. அத்தோடு Bon Odori விழா உட்பட அனைத்து அம்சங்களிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இவ்விழா இன்னும் பலப்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.
பல சர்ச்சைகளின் பின்னர் இந்த விழா நேற்று சிறப்பாக நடந்தேறியுள்ளது.