உலு சிலாங்கூர், ஜூலை 27 :
உலு பெர்னாம், கலும்பாங், கம்போங் சுங்கை சபாய் சாலையில் இன்று லோரி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில், ஓட்டுநர் உடல் கருகி மரணமடைந்தார்.
உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அர்சாத் கமாருடின் கூறுகையில், காலை 11.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 45 வயதுடைய நபர், செரண்டாவில் இருந்து சுங்கை சபாயில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற ஹினோ லோரியை ஓட்டிச் சென்றார்.
“பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற லோரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது பக்கம் சறுக்கி, கவிழ்ந்து செம்பனை தோட்டத்தில் விழுந்தது.
“விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் மீது டீசல் கசிந்து தீப்பிடித்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீப்பிடித்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அர்சாத் கூறினார்.
மேலும் இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது.