தாப்பா, ஜூலை 28 :
இங்குள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 311.4 ஆவது கிலோமீட்டரில், அவர் ஓட்டிச் சென்ற காரில் 4 கிலோகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 44 வயது ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில், சந்தேகத்திற்கிடமான முறையில் காரை ஓட்டிச் சென்றதைக் கண்ட நெடுஞ்சாலை ரோந்துப் பணியாளர் அந்தக் காரை தடுத்து நிறுத்தியதாக, தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர், வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சந்தேக நபர் ஓட்டிச் சென்ற வெள்ளை நிற Honda Accord காரில் கஞ்சா என சந்தேகிக்கப்படும் காய்ந்த செடிகள் நான்கு அடுக்குகளாக வைக்கப்பட்டிருந்தன.
“சந்தேக நபர், பாகன் செராயில் இருந்து, பொருட்களை வழங்குவதற்காக பினாங்கில் இருந்து கிள்ளான் பள்ளத்தாக்குக்கு செல்லும் வழியில் போதைப்பொருளை ‘நகர்த்துபவர்’ என அடையாளம் காணப்பட்டார்,” என்று அவர் இன்று தாப்பா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக சந்தேக நபர் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
” இக் கைது நடவடிக்கையை தொடர்ந்து இக்கும்பலின் மற்ற உறுப்பினர்களையும் போதைப்பொருள் விநியோகத்தின் மூலத்தையும் நாங்கள் அடையாளம் காண முயற்சிக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
சந்தேகநபர் போதைப்பொருள் குற்றங்கள் உட்பட முன்னைய குற்றவியல் பதிவுகளை கொண்டவர் என்று அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா RM10,000 மதிப்புடையது என்றும், இது 2,684 போதைப்பித்தர்கள் பயன்படுத்த போதுமானது என்றும் வான் அசாருதீன் கூறினார்.