ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 3 :
கூலாயில் RM9.45 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகளை சுங்கத் துறை கண்டுபிடித்துள்ளது. இதுவே இந்தாண்டில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய மதிப்புக்கொண்ட நடவடிக்கை என்று ஜோகூர் சுங்கத் துறை இயக்குநர் சசாலி முகமட் தெரிவித்தார்.
ஜூலை 23 அன்று நண்பகல் 2.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையின் போது, எட்டு மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவை ஒரு சேமிப்பு
கிடங்கில் கேன்வாஸால் மூடப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் “வரிக்கு முந்தைய பொருட்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு RM3.8 மில்லியன் ஆகும், அதே நேரத்தில் வரி மதிப்பு மட்டும் RM5.7 மில்லியன் என்றார்.
“கிடங்கின் உரிமையாளர் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை நாங்கள் அடையாளம் காண முயற்சிக்கிறோம்,” என்று சசாலி மேலும் கூறினார்.
சில அட்டைப்பெட்டிகள் நனைந்து மற்றும் கறை படிந்திருப்பதால், இவை அயல் நாடுகளான இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் என நம்பப்படுகிறது என்றார்.
இது தொடர்பில், இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 3) ஜோகூர் மாநில சுங்கைத் திணைக்களத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சசாலி இதனைத் தெரிவித்தார்.
இந்த சோதனையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.