பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 11 :
கோலாலம்பூரை நோக்கிய காராக்-பெந்தோங் நெடுஞ்சாலையில் 75.9ஆவது கிலோமீட்டரில் விபத்து ஏற்பட்டதன் காரணமாக, பகாங்கின் செமந்தான் ஆற்றில் இரசாயனம் கலந்ததன் காரணமாக, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள 397 பகுதிகளுக்கு மீண்டும் நீர் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆயிர் சிலாங்கூர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஆற்றில் இரசாயன மாசு ஏற்பட்டதால், அதிகாலை 4.30 மணிக்கு லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.
இதனால் கோலாலம்பூரிலுள்ள 172 பகுதிகளிலும், உலு லங்காட்டில் 222 பகுதிகளிலும், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள 3 பகுதிகளிலும் உள்ள பயனர்கள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 10 மணி முதல் நீர் விநியோகத்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
அத்தோடு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் லங்காட் 2 ஆலை செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நீர் விநியோகத்தடை நிலவும் முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பயனர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க தண்ணீர் டேங்கர்கள் அவ்விடங்களுக்கு அனுப்பப்படும் என்றும் அது கூறியது.
“சம்பவம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் அவ்வப்போது ஆயிர் சிலாங்கூர் மொபைல் அப்ளிகேஷன், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற எங்களின் அனைத்து அதிகாரப்பூர்வ சேனல்களையும் நுகர்வோர் பார்க்கலாம் அல்லது 15300 என்ற எண்ணில் ஆயிர் சிலாங்கூர் கால் சென்டரை அழைக்கலாம் என்றும் அது அப்பதிவில் தெரிவித்துள்ளது.