ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 11:
செவ்வாய்க்கிழமை ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்திரி மற்றும் போந்தியான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில் போதைப்பொருள் கடத்தல், விநியோகத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறுகையில், இந்தச் சோதனையில் ஒரு பெண் மற்றும் ஒரு வெளிநாட்டவர் உட்பட 32 முதல் 49 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.
அவர் அளித்த தகவலின்படி, 11.13 கிலோகிராம் எடையுள்ள சியாபு போதைப்பொருள், 4.23 கிலோ எடையுள்ள கெட்டமைன் மற்றும் 440 எரிமின் 5 மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து RM346,000 மதிப்புள்ள ஆறு வாகனங்கள், RM109,840 ரொக்கம், RM7,758 மதிப்புள்ள பல்வேறு வகையான நகைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
“இந்த சிறப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் பரிமுதல்களின் மொத்த மதிப்பு RM1.107 மில்லியன் ஆகும்,” என்று அவர் இன்று ஜோகூர் காவல் படைத் தலைமையகத்தில் (IPK) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.









