பாகன் செறை, ஆகஸ்ட் 13 :
கடந்த வியாழன் அன்று செமங்கோலில் உள்ள செம்பனைத் தோட்டத்தில், தலைக் கவசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பேராக் காவல்துறையின் பதில் தலைவர், டத்தோ அசிசி மாட் அரிஸ் கூறுகையில், பேராக் காவல் படைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் உறுப்பினர்கள் பிற்பகல் 3.50 மணியளவில் மேற்கொண்ட சோதனையில், 19 முதல் 38 வயதுக்குட்பட்ட மூவரைக் கைது செய்தனர்.
தமது துறைக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொண்ட சோதனையின் விளைவாக ஹெல்மெட்டில் கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
“கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் RM98,429.26 மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது 2,000 போதைப்பித்தர்களால் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தேக நபர்களால் போதைப்பொருள் விநியோகம் செய்ய பயன்படுத்தியதாக நம்பப்படும் Yamaha Y15ZR மோட்டார் சைக்கிள் மற்றும் லோரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர் என்று அவர் இன்று IPD கேரியானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில், இரண்டு சந்தேக நபர்களுக்கு கடந்தகால குற்றவியல் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
“சந்தேக நபர்கள் அனைவரும் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மேலும் “அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952ன் பிரிவு 39B-ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.