சிரம்பான், ஆகஸ்ட் 14:
இங்குள்ள தொழிற்சாலை தொழிலாளி என்று நம்பப்படும் ஒரு நபர் தனது முதலாளியால் தாக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, அது தொடர்பில் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர் என்று சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் தெரிவித்தார்.
இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை காவல்துறைக்கு எந்த அறிக்கையும் வரவில்லை என்றார்.
சனிக்கிழமையன்று, சம்பவம் தொடர்பான மூன்று வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின, அவற்றில் இரண்டு வீடியோக்கள் ஒரு நபர் ஒரு குச்சியால் தாக்கப்பட்டதைக் காட்டியது.
16 வினாடிகள் நீளம் கொண்ட மூன்றாவது வீடியோ, அடிக்கப்பட்டதால் சிவப்பாக இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆடவரின் உடலின் பின்புறத்தினை காணமுடிகிறது, ‘செனவாங்கில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளிகளை அடிக்கும் முதலாளியின் செயலைக் காட்டும் வீடியோ என்று விளக்கத்துடன் இது வெளியாகியிருந்தது.
இந்த வீடியோ பகிர்வுக்கு நெட்டிசன்களிடமிருந்து பல்வேறு எதிர்வினைகள் கிடைத்தன, மேலும் அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யுமாறு கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.