பெசூட், ஆகஸ்ட் 16 :
கிளாந்தானில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன 11 சுற்றுலாத் தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர், மூத்த தீயணைப்பு கண்காணிப்பாளர் II, முகமட் வில்டன் அஸ்ஹாரி கூறுகையில், கோலக்கிராயில் எட்டு இடங்களும், ஜெலியில் மூன்று இடங்களும் இனங்காணப்பட்டுள்ளதாக கூறினார்.
பட்டியலிடப்பட்ட இடங்களில் கோலக்கிராயில் உள்ள சுங்கை கெனெரோங், கூனுங் ஸ்டோங் நீர்வீழ்ச்சி, லாதா பெராங்கின் மற்றும் லாதா ஒய் ஆகியவையும், அதே சமயம் ஜெலியில் லாதா ஜங்குட் மற்றும் லாதா ரென்யூட் ஆகியவை அடங்கும்.
“இந்த அபாயகரமான பகுதியில் ஓய்வுநேர நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் மக்கள் எப்போதும் வானிலை குறித்து விழிப்புடன் இருப்பதோடு, தேவையற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க சம்பந்தப்பட்ட தரப்பினரால் வெளியிடப்படும் தினசரி வானிலை அறிக்கைகளைப் பார்க்க வேண்டும்,” என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆண்டின் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இந்த ஜூலை மாதம் வரை, 23 நீரில் மூழ்கிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு 18 வழக்குகளுடன் ஒப்பிடும்போது இது அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.








