கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 :
இங்குள்ள பெர்டானா தாவரவியல் பூங்காவில் உள்ள ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மூதாட்டி, காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறும் முன் தனது பிள்ளைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டாங் வாங்கி காவல்துறையின் தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா கூறுகையில், பாதிக்கப்பட்ட 68 வயதான மூதாட்டி பங்சாரைச் சேர்ந்தவர் என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
“காவல்துறையினர் குடை, செருப்புகள் மற்றும் அவரது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த, அவரது குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு எண்ணைக் கொண்ட ஒரு குறிப்பையும் (note) கண்டுபிடித்தனர்.
“அவரது குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, அவர் காலை 6 மணிக்கு வெளியே சென்றபோது , தனது பிள்ளைக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், சடலம் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.