கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 :
நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) செமினியில் உள்ள ஒரு வளாகத்தில் RM163,550 மதிப்புள்ள மானிய விலை டீசல் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் (KPDNHEP) இயக்குநர் முகமட் சுஹைரி மாட் ராடே கூறுகையில், மேலதிக விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, மலேசிய காவல்துறையின் (PDRM) சிறப்புக் குழுவினால் அவ்வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் 35 மற்றும் 45 வயதுடைய உள்ளூர்காரர்கள் என அவர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஐபிசி ரக பீப்பாய்கள் 47, டீசல் என சந்தேகிக்கப்படும் திரவம் கொண்ட 31 பீப்பாய்கள், அவை மொத்தம் 31,000 லிட்டர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டீசல் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வாகனங்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டன.
“கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சேமித்து வைத்து கையாள்வதற்கான ஆவணங்கள் அல்லது அனுமதியை சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.