ஷா ஆலாம், ஆகஸ்ட் 29 :
நேற்று, இங்குள்ள புன்சாக் ஆலாம் 3 ஆம் கட்டத்தில், கைவிடப்பட்ட ஒரு பொதுக் கழிப்பறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமட் கூறுகையில், விசாரணைக்கு உதவுவதற்காக உயிரிழந்த சிறுவனின் 15 மற்றும் 16 வயதுடைய நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304 இன் படி விசாரிக்கப்பட்டது என்றார்.
“கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவு போதைப்பொருளுக்கு எதிர்மறையானது என்றும் அவர்களுக்கு எதிரான தடுப்பு காவல் விண்ணப்பம் இன்று காலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,” என்று அவர் இன்று சிலாங்கூர் காவல் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
16 வயது இளைஞனின் மரணத்திற்கான காரணம் குறித்து கேட்டபோது, அர்ஜுனாய்டி மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க பிரேத பரிசோதனை அறிக்கைக்காக தாம் இன்னும் காத்திருப்பதாக தெரிவித்தார்.
நேற்று, பண்டார் புன்சாக் ஆலம் 3 ஆம் கட்டத்தில் உள்ள நீண்ட காலம் பாவிக்கப்படாத ஒரு பொதுக் கழிப்பறையில் இருந்த சோபாவில் பாதிக்கப்பட்ட சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தான், அப்போது முறையே 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு நண்பர்கள் கைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
பின்னர், பாதிக்கப்பட்டவரின் இரண்டு நண்பர்களும் பாதிக்கப்பட்டவர் தூங்கிக் கொண்டிருந்த கழிப்பறை கதவுக்கு முன் இருந்த சோபாவின் கீழ் விளையாட்டுக்காக நெருப்பு வைத்தனர். ஆனால் சோபா வேகமாக தீப்பிடித்தது எரிந்ததால், தூங்கிகொண்டிருந்த சிறுவனும் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் நேற்று அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை உண்டுபண்ணியிருந்தது.