கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 :
இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 31) டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த 2022 தேசிய தின கொண்டாட்டத்தின் போது, சட்டவிரோதமாக பறக்கவிடப்பட்ட குறைந்தது நான்கு ஆளில்லா விமானங்களை இங்குள்ள போலீசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
புக்கிட் அமான் ஏர் ஆபரேஷன் (PGU) ட்ரோன் பிரிவு அதிகாரி, ஆய்வாளர் முஹமட் ஃபைஸ் ஷஹாபுடின் கூறுகையில், இவ்வாறு அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட்ட உரிமையாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“தேசிய தின நிகழ்வு பகுதியைச் சுற்றி தனியார் ட்ரோன்கள் பறக்கவிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் இன்று இங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்”.
“அனுமதியின்றி பறக்கும் எந்த ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டு (அவற்றின் உரிமையாளர்கள்) மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
தேசிய தின அணிவகுப்பில் மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் அரசியார் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்ட இடத்தில், தமது பிரிவைச் சேர்ந்த நான்கு பணியாளர்கள் நிறுத்தப்பட்டதாக ஆய்வாளர் முஹமட் ஃபைஸ் மேலும் கூறினார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 29), CAAM, பொதுப் பாதுகாப்பை உள்ளடக்கிய எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களையும் தவிர்க்கும் நோக்குடன் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது, சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.









