கோலாலம்பூர், செப்டம்பர் 10 :
RM100,000 லஞ்சம் கேட்டதாக சந்தேகத்தின் பேரில், இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜென்ட் அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) நேற்று கைது செய்யப்பட்டனர்.
30 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும் தலைநகரைச் சுற்றிய பகுதிகளில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கைது செய்யப்பட்டனர்.
ஆதாரங்களின்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தற்போது MACC ஆல் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கை மறைப்பதற்காக, போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து RM100,000 லஞ்சம் கேட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேக நபர், லஞ்சப் பணத்தைக் கோருவதற்கும் பெறுவதற்கும் இடைத்தரகர் போல் செயல்படும் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஆவார்.
பாதிக்கப்பட்டவரிடம் கேட்ட தொகையின் ஒரு பகுதியான RM50,000 லஞ்சம் வாங்கியபோது நிறுவனத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜென்ட் ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விண்ணப்பித்ததையடுத்து, நிறுவன மேலாளர் நேற்று தொடங்கி செப்டம்பர் 12 வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
எனினும், அவர்களது வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் அதிகாரி மற்றும் போலீஸ் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், எம்ஏசிசி மூத்த புலனாய்வு இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுதீன் ஹாஷிமை தொடர்பு கொண்டபோது, அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.
எம்ஏசிசி சட்டம் 2009ன் பிரிவு 16(ஏ)(ஏ)ன்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.