மஇகா முன்னாள் தலைவரும், மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவருமான துன் எஸ்.சாமிவேலு இன்று அதிகாலை காலமானதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி, தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர் எஸ்.சாமிவேலுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.”
சாமிவேலு தனது 86வது வயதில் இன்று காலை 7 மணியளவில் இங்குள்ள அவரது வீட்டில் காலமானார். அவர் 1979 முதல் 1989 வரை மற்றும் 1995 முதல் 2008 வரை பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1974 முதல் 2008 வரை பேராக்கில் உள்ள சுங்கை சிப்புட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றிய உறுப்பினர்களில் ஒருவராக, சாமிவேலு 1978 முதல் 2008 வரை துன் ஹுசைன் ஒன், துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் துன் அப்துல்லா அகமது படாவி ஆகிய மூன்று பிரதமர்களின் கீழ் பணியாற்றினார்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் மதிப்புமிக்க பிரவாசி பாரதிய சம்மான் விருது (பிபிஎஸ்ஏ) இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கான மிக உயர்ந்த இந்திய விருதாகும், இது இந்தியாவில் பிரவாசி பாரதிய திவாஸின் வருடாந்திர நிகழ்வின் போது வழங்கப்படும்.