(கோகி கருணாநிதி)
மாசாய்:
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நேற்று காலை பெர்மாஸ் தொகுதிக்குட்பட்ட தாமான் மேகா ரியா, கோத்தா புத்ரியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களைச் சந்தித்து அவர்களது கருத்துகள், தேவைகள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அவர், பெர்மாஸ் என்பது பல இன மக்கள் ஒற்றுமையாக வாழும் பகுதி என்றும், மக்களின் குரலை நேரடியாகக் கேட்டு அவர்களது தேவைகளுக்கு தீர்வு காண்பதே அரசின் நோக்கமாக இருப்பதாகக் கூறினார். மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான நெருக்கமான உறவுதான் சிறந்த நிர்வாகத்திற்கும் நிலையான வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலம் ஜோகூரின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும், அரசாங்கம் எந்த சமூகத்தையும் புறக்கணிக்காமல் அனைவரின் நலனுக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதி முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் 15ஆவது சட்டமன்றத் தேர்தலில் பெர்மாஸ் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் பஹாருடின் முகமது தாயிப் வெற்றி பெற்றார். அப்போது தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இந்த முறை நடைபெறும் 16ஆவது மாநிலத் தேர்தலில் பெர்மாஸ் தொகுதியில் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. தேசிய முன்னணி சார்பில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் பஹாருடின் முகமது தாயிப் மீண்டும் களமிறங்கியுள்ளார். பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஷேரன் தியோ, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் வேலா, பெர்சாமா கட்சி சார்பில் டாக்டர் ஜாமில் நஜ்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதனால் பெர்மாஸ் தொகுதியில் இந்த முறை கடுமையான நான்கு முனைப் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.




















